Welcome to my blog :)

rss

Wednesday, April 14, 2010

இனி, மின்மினி Episode 3

நியூயார்க்

செல்போனில் தன் குரலின் டெசிபலை உயர்த்தினான் விஜேஷ்... ''இதோ பார்... ஒரு டெலிபோன் பூத்துக்குள்ளே புகுந்துக்கிட்டு நீ சொல்ற கதையைஎல்லாம் நம்ப நான் தயாரா இல்லை. விதி சிரிச்சா என்ன... அழுதா என்ன? நான் இப்போ அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். இன்னும் சில நிமிஷங்கள்ல அந்த வீட்டைப் பார்க்கப்போறேன். வீடு பிடிச்சிருந்தா, உடனே அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுடுவேன்!''

விஜேஷ் சொல்லச் சொல்ல, அந்தப் பெண் மறுமுனையில் கெஞ்சினாள்... ''ப்ளீஸ் விஜேஷ்! நான் சொல்றதைக் கேளுங்க. உங்களுக்கு நியூயார்க்கில் ஒரு வீடு வேணும், அவ்வளவுதானே? நான் ஏற்பாடு பண்றேன். ஹட்சன் நதிக்கரையில் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டை விக்கிறதாச் சொல்லிட்டுஇருந்தார். நான் கேட்டுப் பார்க்கிறேன்.''

''என்னது! ஹட்சன் நதிக்கரையில் வீடு விலைக்கு வருதா?''

''ஆமா...''

''அந்த ஏரியாவில் வீடு வாங்கணும்னா, கையில குறைந்தபட்சம் பத்து லட்சம் டாலராவது இருக்கணுமே?''

''கண்டிப்பா...''


''அம்மா தாயே, ஆளை விடு! என் கையில் இருக்கிறது ரெண்டு லட்சம் டாலர்தான்! பத்துக்கு நான் எங்கே போவேன்?''

''நியூயார்க்கில் ரெண்டு லட்சம் டாலருக்கெல்லாம் வீடு கிடைக்கிறது ரொம்பவும் கஷ்டம். மூணு பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டை நீங்க வாங்கணும்னா, உங்க கையில் குறைஞ்சபட்சம் அஞ்சு லட்சம் டாலராவது வேணும், விஜேஷ்!''

''எனக்கு அதெல்லாம் தெரியாது. லாயர் ஃப்ளோரா ரெண்டு லட்சம் டாலருக்குள்ளே இப்பப் பார்க்கப்போற வீட்டை முடிச்சுத் தர்றதா சொல்லி இருக்காங்க. அது பழைய காலத்து வீடு. இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமா ரெனவேஷன் பண்ணிக்கலாம்.''

மறுமுனையில் அந்தப் பெண் பதற்றமானாள்... ''விஜேஷ்! அந்த வீட்டை வாங்காதீங்க. அது வீடு இல்லை.''

''பின்னே?''

''விபரீதம்!''

விஜேஷ் சிரித்தான். ''கடந்த ஆறு மாத காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோயிட்டாங்க; உங்களுக்கும் அந்த நிலைமை வரலாம்னு சொல்லப்போறே... அதுதானே விபரீதம்?''

''ம்...''

''இதோ பார்... நீ சொல்ற அந்த விபரீதத்தைப்பத்தி நான் ஃப்ளோராகிட்டே பேசிட்டேன்.''

''அதுக்கு என்ன சொன்னா?''

''அக்ரிமென்ட் போட்ட அந்த ரெண்டு பேருமே எழுபது வயசுக்கு மேற்பட்டவங்க. தவிர, அவங்க ஹார்ட் பேஷன்ட்ஸ். ஒரு பெண்; ஒரு ஆண். பெண் பிரிட்டனி ஜான்சன். அதிக நடைப் பயிற்சி காரணமா மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். ஆண் ஜான் கரோல். ஒவ்வொரு சனிக்கிழமை ராத்திரியும் ஓவராக் குடிப்பார். பைபாஸ் சர்ஜரி பண்ணின அந்த ஹார்ட் தாங்குமா? மண்டையைப் போட்டுட்டார். ஸோ, அந்த ரெண்டு பேரோட மரணங்களுக்கும் வீடு காரணம் இல்லை. தங்களுடைய ஹெல்த்தைப் பாதுகாக்கத் தவறியதுதான் காரணம். அக்ரிமென்ட் போடாம இருந்திருந்தாக்கூட, அந்த ரெண்டு பேரும் செத்துப்போயிருப்பாங்க...''

''விஜேஷ்! உங்களுக்கு ஒரு முக்கியமான உண்மை புரியலை!''

''என்ன உண்மை?''

''அந்த ரெண்டு பேரும் வயசானவங்க, ஹார்ட் பேஷன்ட்ஸ்னு சொன்னதெல்லாம் உண்மை. ஆனா, அந்த ரெண்டு பேரோட மரணம் இயற்கையானது அல்ல.''

''அப்புறம்?''

''மர்டர்ஸ்...''

''இப்படி ஏதாவது ஒண்ணைச் சொல்லி பயமுறுத்தி, என்னை அந்த வீட்டை வாங்கவிடாம பண்றதுதானே உன்னோட நோக்கம்.''

''இல்லை! உங்க உயிரைக் காப்பாத்தறதுதான் என் நோக்கம்.''

''அப்படின்னா, என் முன்னாடி வந்து நில்லு. அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டு. அவை நம்புற மாதிரி இருந்தா, போலீசுக்குப் போவோம்.''

''போலீசுக்குப் போக முடியாது விஜேஷ்.''

''ஏன்?''

''அதுல ஒரு பிரச்னை இருக்கு.''

''என்ன பிரச்னை?''

''அதை வெளியில் சொல்ல முடியாது.''

''என்ன நீ, நான் எதைக் கேட்டாலும் நெகட்டிவ்வாவே பதில் சொல்லிட்டு இருக்கே? அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உன்னிடம் இருந்தா, போலீசுக்குப் போக வேண்டியது தானே?''

''இது நம்ம ஊர் போலீஸ் இல்லை. நியூயார்க் போலீஸ். சட்டம் இங்கே நாணல் மாதிரி வளைந்து கொடுக்காது. இரும்புத் தூண் மாதிரி நிக்கும்.''

''உனக்கு பயமா இருந்தா சொல்லு... நானும் உன்கூட வர்றேன்.''

''போலீசுக்கெல்லாம் போக முடியாது விஜேஷ். அப்படி போலீசுக்கு விஷயத்தைக் கொண்டு போனா அதனுடைய பின்விளைவுகள் ஒரு சுனாமி மாதிரி இருக்கும்.''

விஜேஷ் சிரித்தான். ''ஒரு பொய்யைப் பேசிட்டா, அந்தப் பொய்யைக் காப்பாத்த இன்னும் பத்து பொய்கள் சொல்ல வேண்டியிருக்குமாம். அதைத்தான் நீ இப்போ பண்ணிட்டு இருக்கே!''

''விஜேஷ்! நான் சொன்னதுல எதுவும் பொய் கிடையாது. தயவுபண்ணி அந்த வீட்டை வாங்கற எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க.''

''ஒரு கால்புள்ளியைக்கூட வெக்கற மாதிரி இல்லை. ஃப்ளோரா காரை நிறுத்தியாச்சு. வீடு இருக்கிற ஏரியா வுக்கு வந்துட்டோம்.''

''ஒருவேளை உங்களுக்கு அந்த வீடு பிடிக்க லைன்னா...''

''அதுக்கு சான்ஸே இல்லை. ஏன்னா, என்னுடைய நண்பன் ஃப்ரெட்ரிக்கும் அவனுடைய சிஸ்டர் ஃப்ளோராவும் ஒரு வீட்டை வாங்கிக்கச் சொல்லி சிபாரிசு பண்றாங்கன்னா, அதுல தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. ஸோ, இனிமே எனக்கு போன் பண்ணாதே! அந்த ஹட்சன் நதிக் கரையில் இருக்கிற வீட்டை வேற எந்த சோணகிரிக்காவது வாங்கிக் குடுத்து கமிஷன் பார்த்துடு!'' - பேசிவிட்டு செல்போனை அணைத்தான் விஜேஷ்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஃப்ளோரா, பெர்ஃப்யூம் வாசனையோடு பார்த்தாள். பேசிய தமிழ் புரியாததால் பார்வையில் குழப்பம்.

''செல்போனில் யார்?''

''சிறிது நேரத்துக்கு முன்பு பேசிய அதே பெண்.''

''அந்தப் பெண்ணிடம் கோபமாகப் பேசினீர்களே... ஏதாவது பிரச்னையா?''

''ஒரு பிரச்னையும் இல்லை. ஹட்சன் நதிக் கரையில் ஒரு வீடு விற்பனைக்கு வருகிறதாம். வாங்கிக்கொள்ளும்படி சொன்னாள். நான் வேண்டாம் என்று சொன்னதால், அவளுக்குக் கோபம். நாம் இப்போது பார்க்கப்போகிற வீட்டைப்பற்றி பொய் மழை பொழிந்து, அதை வாங்கவே கூடாது என்று சொல்லி, என்னை ஒருவழி செய்துவிட்டாள்.''

''பொறாமை பிடித்தவள்! ரியல் எஸ்டேட் பிசினஸில் இது போன்ற பொறாமைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.''

இருவரும் காரைவிட்டு இறங்கினார்கள். நகரை விட்டுத் தள்ளி இருந்த அந்த இடத்தில் நிசப்தம் ஏதோ செதுக்கப்பட்ட பொருள் மாதிரி தெரிந்தது. மனித நடமாட்டம் அறவே இல்லை. அடர்த்தியான சிப்ரஸ் மரங்களுக்கு நடுவில், அந்தச் செங்காவி வண்ணம் பூசப்பட்ட வீடு கண்ணாமூச்சி காட்டியது.

ஃப்ளோரா கையில் சாவியோடு முன்னால் நடந்தாள்.

விஜேஷ் கேட்டான்... ''கார் உள்ளே போகாதா?''

ஃப்ளோரா ஒரு சின்னப் புன்னகையோடு, வீட்டுக்கு முன்பாகத் தெரிந்த அந்தப் பெரிய இரும்பு காம்பவுண்ட் கேட்டைக் காட்டினாள். கேட் ஒரு பக்கமாகச் சாய்ந்து மண்ணில் புதைந்து போயிருந்தது.

''சென்ற வாரம் பெய்த பெரு மழையில் காம்பவுண்ட் கேட்டின் பில்லர் சாய்ந்து, கேட் மண்ணில் போய் மாட்டிக்கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் கேட்டைச் சரிசெய்யும் பணி துவங்கும். இப்போது நாம் இந்தப் பக்கவாட்டு கேட் வழியாக உள்ளே போய்விடலாம்.''

ஃப்ளோரா சொல்லிக்கொண்டே அந்தச் சிறிய கேட்டில் இருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்து கேட்டைத் தள்ளினாள். அது 'ழேய்ய்....' என்று ஒரு குடிகாரனைப் போல் கத்திக்கொண்டு பின்னால் போயிற்று. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். பனி பெய்து நனைந்து இருந்த புல் தரையில் ஃப்ளோரா முன்னால் நடந்து போக, விஜேஷ் அவளைப் பின்தொடர்ந்தான்.

பத்தடி நடந்தவன் சட்டென்று நின்றான். அவனுடைய முதுகில் யாரோ கைவைத்த மாதிரியான உணர்வு.

'நிஜமா... பிரமையா?' என்று யோசிப்பதற்குள், முதுகுக்குப் பின்னால் அந்த மூச்சிரைப்புச் சத்தம்!

கோவை

ந்த மத்தியான வேளையிலும், ஃப்ரிஜ்ஜில் வைத்த பொருள் போல் கோவை குளிர்ந்து போய் இருக்க, மின்மினி மொட்டை மாடியில் மெள்ள உலவியபடி செல்போனில் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள்.

''இல்ல மாலு... எனக்குக் கச்சேரி பண்றதுல இஷ்டமே இல்லை. என்னோட மிஸ்டர்தான் கம்பெல் பண்ணினார். ஏதோ இசை விழாவாம்... அதுக்குக் கிடைக்கிற ஃபண்ட்ஸ் எல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் போகுதாம். சரி, ஒரு நல்ல காரியத்துக்கு நாம கத்துக்கிட்ட பாட்டும் உதவட்டுமேன்னுதான் ஒப்புக்கிட்டேன். நீயும் உன் ஹஸ்பெண்டும் சரியா ஆறு மணிக்கெல்லாம் புரந்தரதாஸர் ஹாலுக்கு வந்துடுங்க. சீஃப் கெஸ்ட் வேறு யாருமில்லை, வானவராயர்தான்!'' - செல்போனில் பேசிக்கொண்டே திரும்பிய மின்மினி, வேலைக்காரி தயக்கமாக நிற்பதைப் பார்த்துவிட்டு, 'என்ன' என்பது போல் புருவங்களை உயர்த்தினாள்.

''அம்மா! கேட்ல இருக்கிற செக்யூரிட்டி பேசினாங்க. உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக பெரியவர் மல்லய்யா வந்து இருக்காராம். உள்ளே அனுப்பவான்னு கேட்டாங்க.''

மின்மினி சற்றே பதற்றமானாள். ''இதுக்கு என்கிட்டே கேட்கணுமா? அவர் எப்ப என்னைத் தேடி வந்தாலும், உடனடியாக உள்ளே அனுப்பிவைக்கணும்னு செக்யூரிட்டிகிட்டே ஏற்கெனவே சொல்லியிருந்தேனே!''

''இதோ அனுப்பச் சொல்றேம்மா!'' வேலைக்காரி படிகளில் இறங்கி ஓட, மின்மினி செல்போனுக்கு உதட்டைக் கொடுத்து, ''ஸாரி மாலு... எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த குருநாதர் கீழே வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காராம். சாயந்திரம் நாம பார்ப்போம்!''

''யாரு... அந்த பெல்லாரி மல்லய்யாவா?''

''பரவாயில்லையே! அவரோட பேரை அட்சரசுத்தமாக ஞாபகம் வெச்சிருக்கியே!''

எதிர்முனையில் அந்த மாலு சிரித்தாள்... ''தெலுங்கு சினிமா பட டைட்டில் மாதிரி இருக்கிற அவரோட பேரை அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா என்ன?''

''ஏய்! பெரியவங்களைக் கிண்டல் பண்ணாதே! பெல்லாரியில் நான் அப்பா-அம்மாவை இழந்துட்டு அநாதையா நின்னப்ப, அவர்தான் எனக்கு ஆதரவாக இருந்து மஹிளா சமிதி விடுதியில் இடம் வாங்கிக் கொடுத்து...''

''ஸாரி மின்மினி! இந்த பெல்லாரி ஃப்ளாஷ்பேக் ரீல் ரொம்பவும் பழசாயிடுச்சு. புதுசா வேற ஒரு பிரின்ட் போட்டுக்கோயேன்.''

''சாயந்திரம் வா சொல்றேன்... உன்னை...'' - மின்மினி பற்களைக் கடித்து, செல்போனை அணைத்தாள். படிகளில் வேகவேகமாக இறங்கி ஹாலுக்கு வந்தபோது, மல்லய்யா வாசற்படிகள் ஏறி உள்ளே வந்துகொண்டு இருந்தார்.

மல்லய்யாவுக்கு 60 வயது இருக்கலாம். சராசரி உயரத்தில், சற்றே கனத்த உடம்பு. ரோமம் இல்லாத முன் மண்டையை மூன்று விபூதிக் கோடுகளும், ஒரு குங்குமப் பொட்டும் குத்தகைக்கு எடுத்திருக்க... பின்னந்தலையில் இருந்த நீளமான முடிகள் ஒரு குடுமியாக மாறியிருந்தன. ஆந்திரா பாணியில் கட்டப்பட்ட வேட்டியும், மார்பைச் சுற்றியிருந்த வெள்ளை வஸ்திரமும் அவரை மதிப்போடு பார்க்கவைத்தது.

மின்மினி ஒட்டமும் நடையுமாகப் போய் அவருடைய பாதங்களில் விழுந்தாள். அவர் மின்மினியின் தலையில் தன் வலது கையைவைத்தார். ''நீ என்னிக்கும் நல்லாயிருக்கணும்... எழுந்திரும்மா!''

மின்மினி எழுந்தாள். கும்பிட்ட கையோடு சொன்னாள், ''ஐயா! மன்னிக்கணும்...''

''எதுக்கு?''

''கேட்ல இருந்த சென்ட்ரி கான்ஸ்டபிள் உங்களை உடனே உள்ளே அனுப்பாம வாசல்ல நிக்க வெச்சதுக்காக.''

மல்லய்யா தன் கறை இல்லாத பற்களைக் காட்டிச் சிரித்தார். ''அட, என்னம்மா நீ... இதுக்கெல்லாம் போய் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு? நீ யாரு... ஒரு கலெக்டரோட மனைவி. யார் வேணும்னாலும் சர்வசாதாரணமா வந்து போறதுக்கு இது என்ன சத்திரமா? நான் இந்த வீட்டுக்கு வேண்டியவன்னு தெரிஞ்சிருந்தும் பாம் டிடெக்டர் வெச்சு சோதனை போட்டுத்தான் அனுப்பினாங்க. யார் யாருக்கு என்னென்ன கடமைகள் இருக்கோ, அதை அவங்க பண்ணியாகணும்!'' - மல்லய்யா சொல்லிக்கொண்டே போய், ஹாலில் போட்டிருந்த சோபாவில் சாய்ந்தார். மின்மினியும் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

''ஐயா! திடீர்னு கோயம்புத்தூருக்கு வந்து இருக்கீங்க. ஏதாவது விசேஷமா?''

''விசேஷம்தாம்மா! இங்கே வடவள்ளிக்குப் பக்கத்துல க்யூரியோ கார்டன் அவென்யூன்னு ஒரு காலனி இருக்கு. அந்தக் காலனியில் அம்சமான விநாயகர் கோயில் ஒண்ணு இருக்கு. ஆபத்சகாய சுந்தர விநாயகர்னு பேர். சக்தி வாய்ந்த விநாயகர். அந்தக் கோயிலோட கும்பாபிஷேகம் நாளைக்கு. அதுல கலந்துக்கச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. உடனே புறப்பட்டு வந்துட்டேன்.''

''ரொம்பச் சந்தோஷம். ஐயா, இன்னிக்குச் சாயந்திரம் நீங்க ஃப்ரீயா?''

''ஏம்மா கேட்கிறே?''

''ஐயா! இன்னிக்குச் சாயந்திரம் ஆர்.எஸ்.புரம் புரந்தரதாஸர் ஹால்ல என்னோட கச்சேரி. நீங்க அவசியம் முன் வரிசையில் உட்கார்ந்து கேக்கணும்.''

''பஞ்சாமிர்தம் சாப்பிடக் கூலியா?'' - சொல்லிச் சிரித்தவர் கேட்டார்... ''உன்னோட கணவர் எப்படி இருக்கார்மா? கல்யாணத்துல பார்த்தது. அதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு ரெண்டு தடவை வந்தும் அவரைப் பார்க்கவே முடியலை.''

''இன்னிக்கு அவரை நீங்க பார்த்துடலாங்கய்யா! மத்தியானம் லஞ்சுக்குக் கண்டிப்பா வர்றதாகச் சொல்லியிருக்கார். நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம். அவரும் உங்களைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருப்பார். 'எனக்கு ஒரு வானம்பாடியைப் பரிசாகக் கொடுத்த வள்ளல் அவர்'னு புகழ்ந்துட்டே இருப்பார். நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா, அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார். இப்பவே போன் பண்ணிச் சொல்லிடறேன்.''

மின்மினி செல்போனை எடுத்தாள். தன் கணவரின் பெர்சனல் செல்போனுக்கு எண்களை அழுத்தினாள். மறுமுனையில் ரிங்டோன் போய், குரல் கேட்டது.

''யெஸ்!'' பங்கஜ்குமாரின் குரல்.

''என்ன யெஸ்! நான் உங்க மின்மினி.''

''ஸாரி... ராங் நம்பர்!'' - பங்கஜ்குமாரின் குரலைத் தொடர்ந்து, செல்போன் இணைப்பு அறுந்தது.

Tuesday, April 6, 2010

இனி, மின்மினி Episode 2


கோவை

போட்டோவில் கேமராவை நேர்ப்பார்வை பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு இருந்த மின்மினியைப் பார்த்ததும், பங்கஜ் குமாரின் உடம்பில் இருந்த ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் ஓர் அதிர்வுக்கு உட்பட்டு, ரத்தத் தில் வெப்பம் பரவியது. அது மூளைக்குள் போய் குபுகுபுத்தது.

'இது மின்மினிதானா?' - பார்வைக்குக் கூர்மை கொடுத்துக் கண்களைச் சுருக்கிய பங்கஜ்குமாரை பெரியவர் ஒரு கேலிப் புன்னகையோடு ஏறிட்டார். குரலைத் தாழ்த்தி ஏற்ற இறக்கத்தோடு கேட்டார்... ''என்னங்கய்யா... இந்தப் போட்டோவைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டீங்க..? இந்தப் போட்டோவில் இருக்கிற பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?''

பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பறித்து, அதையே சில விநாடிகள் வரை வெறித்தார் பங்கஜ்குமார்.

அவருடைய மனைவி மின்மினிதான்! சந்தேகமே இல்லை. வலது கன்னத்தின் கீழ்ப் பகுதியில் ஒட்டியிருந்த அந்தக் கடுகு சைஸ் மச்சமும், சற்றே விரிந்த காதுகளும் அவள் மின்மினிதான் என்று சூடம் ஏற்றி அடிக்காத குறையாகச் சத்தியம் செய்தன. பெரியவரைத் தீப்பார்வை பார்த்தார்.

''இ... இ... இந்த போட்டோ உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?'' - பங்கஜ்குமார் கோபத்தோடு கேட்ட கேள்விக்குப் பெரியவர் பவ்யமாகி, தன் இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காகப் பெருக்கல் குறி போட்டுக்கொண்டார்.

''ஐயா! இது என் மருமகளோட போட்டோ. இந்தப் போட்டோ என்கிட்டே இல்லாம வேற யார்கிட்டே இருக்கும்? இந்த போட்டோவைத் தவிர, வேற ஒரு போட்டோவும் இருக்கு. பார்க்கறீங்களா?''-பெரியவர் கேட்டுக்கொண்டே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அந்த பிரவுன் நிறக் கவரை எடுத்துப் பிரித்தார். போஸ்ட் கார்டு சைஸில் இருந்த போட்டோ ஒன்றை அதிலிருந்து உருவி நீட்டினார், ''ம்... பாருங்க...''

போட்டோவை வாங்கிப் பார்த்த பங்கஜ்குமாருக்கு நெற்றி சட்டென்று வியர்த்து, வாய் உலர்ந்து போனது. அந்த வண்ணப் போட்டோவில் ஒரு சர்ச் பிரதானமாகத் தெரிய, அதன் பின்னணியில் கும்பல் ஒன்று தெரிந்தது. கும்பலின் மையத்தில் பாதிரியார் ஒருவர் வெள்ளை அங்கியில் நின்றிருக்க, அவருக்கு முன்னால் கிறிஸ்துவப் பாரம்பரியத் திருமண உடைகளோடு மின்மினியும் அந்த இளைஞரும் பார்வைக்குக் கிடைத்தார்கள். முகங்களில் பாதரசம் தடவிய மாதிரி பரவசம்.

பெரியவர் சொன்னார், ''ஐயா! அஞ்சு வருஷத்துக்கு முந்தி ஆந்திர மாநிலம் பெல்லாரியில் இருக்கிற ஒரு சர்ச்சில் என்னோட மகன் அல்போன்சுக்கும் மின்மினிக்கும் கல்யாணம் நடந்தபோது எடுத்த போட்டோ இது.''

பெரியவர் சொல்ல, போட்டோவைப் பிடித்து இருந்த பங்கஜ்குமாரின் கை நடுங்கியது. மூளை பிராமிஸ் செய்தது. 'இவள் மின்மினிதான். சந்தேகமே இல்லை!' அடித்துத் துவைத்த துணியாகத் துவண்டுபோன பங்கஜ்குமார் பெரியவரை வியர்த்த முகமாக ஏறிட்டார். ''உங்க மகன் பேர் என்ன சொன்னீங்க?''

''அல்போன்ஸ்.''

''அவர் இப்ப எங்கே?''

''வீட்ல இருக்கான். அவனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. மின்மினி அவனை விட்டுப் போனதிலிருந்தே பித்துப் பிடிச்சவன் மாதிரி ஆயிட்டான். குடிப் பழக்கத்தினால் ஆரோக்கியம் கெட்டுப்போய்... ஜாண்டிஸ் அட்டாக் ஆகி...''

எரிச்சலான பங்கஜ்குமார் கையமர்த்தினார். ''உங்க பேர் என்ன?''

''மைக்கேல் எர்னஸ்ட்...''

''என்ன பண்றீங்க..?''

''டவுன்ஹால்ல பீஃப் பிரியாணி ஸ்டால் ஒண்ணு நடத்திட்டு வர்றேன்!''

''மின்மினிக்கும் அல்போன்சுக்கும் கல்யாணம் நடந்ததாய்ச் சொன்னீங்க. கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்க ஏன் பிரியணும்?''

''கல்யாணம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே அவங்க ரெண்டு பேருக் கும் நடுவுல ஏதோ பிரச்னை வந்தது. மின்மினி சண்டை போட்டுக்கிட்டுப் போயிட்டா.''

''என்ன பிரச்னை?''

''அது என்னான்னு எனக்குத் தெரியலீங்கய்யா! என்னோட பையன்கிட்டே கேட்டேன். அவன் சொல்லலை. மின்மினியைத் தனியா சந்திச்சுக் கேட்டேன். அவளும் சொல்லலை. ரெண்டு பேரையும் சேர்த்துவைக்க நான் முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்கும்போதே, மின்மினி பெல்லாரியில் இருந்த தன்னோட வீட்டைக் காலி பண்ணிட்டு, சென்னைக்குப் போயிட்டா. அவ வீட்டைக் காலி பண்ணின விவரம் எனக்கும் என் மகனுக்கும் நாலஞ்சு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. அல்போன்ஸ் இடிஞ்சுபோயிட்டான். நாங்களும் பெல்லாரியில் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு, மின்மினியைத் தேடி சென்னைக்குப் போனோம். கடந்த அஞ்சு வருஷ காலமா அவளைத் தேடி அலைஞ்சோம். மின்மினியை எங்களால கண்டுபிடிக்க முடியலை. போன வாரம் 'கொடீசியா' வளாகத்துல ஒரு ஃபங்ஷன் நடந்தப்ப நான் அங்கே இருந்தேன். அந்தச் சமயத்துல நீங்களும் மின்மினியும் அந்த ஃபங்ஷன்ல கலந்துக்கிறதுக்காக ஒரே கார்ல வந்தப்பதான் மின்மினிக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடந்திருக்கிற விவரம் எனக்குத் தெரிஞ்சுது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. இந்த விஷயம் என் மகனுக்குக்கூடத் தெரியாது. சட்டப்படி மின்மினி என்னோட மருமக. அல்போன்ஸோட மனைவி. நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது எந்த வகையில் நியாயம்னு தெரியலை. இந்தப் பிரச்னையை நான் ஒரு மனுவா எழுதிக் கொண்டாந்திருக்கேன். நீங்கதான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்.''

பங்கஜ்குமார் சில விநாடிகள் கண் மூடி மௌனமாக இருந்துவிட்டு, பெரியவர் மைக்கேல் எர் னஸ்ட்டை ஏறிட்டார். ''உங்களுக்கு ஒரு தீர்வு வேணும். அவ்வளவுதானே?''

''ஆமாங்கய்யா! நான் நினைச்சிருந்தா பத்திரிகைக்கும் டி.வி-க்கும் போய் விஷயத்தைச் சொல்லி, இதைப் பெரிசுபடுத்தியிருக்க முடியும். அப்படி நான் பண்ண விரும்பலை. உங்ககிட்டே இருந்து எனக்கு ஒரு நியாயமான முடிவு கிடைக்கும்கிற நம்பிக்கை யில்தான் உங்களை ரெண்டு நாளாய்ப் பார்க்க முயற்சி எடுத்து, இன்னிக்குப் பார்த்துட்டேன்.''

''இந்த விஷயத்தை வெளியே யார்கிட்டேயும் சொல்லலையே?''

''இல்லீங்கய்யா!''

''சரி... நாளை காலையில் உங்க மகனோடு என் பங்களாவுக்கு வந்துடுங்க. மேற்கொண்டு பேச வேண்டியதை அங்கே வெச்சுப் பேசிக்குவோம்.''

''எத்தனை மணிக்கு வரணுங்கய்யா?''

''ஏழு மணிக்கெல்லாம் வந்துடுங்க.''

''சரிங்கய்யா!''-மைக்கேல் எர்னஸ்ட் கும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு, அறையில் இருந்து வெளி யேற, வெளிறிப்போன முகத்தோடு அவருடைய முதுகையே வெறித்தார் கலெக்டர் பங்கஜ்குமார்.

நியூயார்க்

பேர் காமாட்சி, ஊர் காஞ்சிபுரம் என்று சொல்லி செல்போனில் பேசிய அந்தப் பெண்ணுடன் விஜேஷ் மேற்கொண்டு பேச முயல, 'பை' சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.

விஜேஷின் முகம் முழுக்கக் குழப்பமும் வியப்பும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு ஸ்லோமோஷனில் பரவியது. அதைக் கவனித்துவிட்டு, காரை ஓட்டிக் கொண்டு இருந்த ஃப்ளோரா கேட்டாள்... ''செல் போனில் பேசியது யார் மிஸ்டர் விஜேஷ்?''

'இவளிடம் சொல்லலாமா, வேண்டாமா' என்று விநாடிகள் யோசித்து, ஆறாவது விநாடியில் வேண்டாம் என்று முடிவு எடுத்து, ''அது... அது... ஒரு ராங் நம்பர்'' என்றான் விஜேஷ்.

''ராங் நம்பரா?''

''ஆமாம்...''

''ஒரு லாயரிடம் பொய் சொல்லக் கூடாது என்பது பொதுவான விதி. உங்களுக்கு வந்தது ராங் நம்பர் இல்லை. சரியான நம்பர்தான். ஆனால், பேசியது மட்டும் ராங் பர்சன். நான் சொல்வது சரியா?''

விஜேஷ் அவளை வியப்பாகப் பார்க்க, அவள் சிரித்தாள். ''உங்களுக்கு வந்தது ராங் நம்பராக இருந்திருந்தால், அந்தப் பேச்சு ஒரு பத்து விநாடிகளுக்குள் முடிந்துபோயிருக்கும். ஆனால், நீங்கள் ஒரு நிமிடம் பேசினீர்கள். அந்த ஒரு நிமிடப் பேச்சு முடிவதற்குள், உங்கள் முகத்தில் ஓராயிரம் முகபாவங்கள். அதிர்ச்சி அலைகள். போனில் ஏதாவது கெட்ட செய்தியா?

''கிட்டத்தட்ட...''

''பேசியது யார்... ஆணா, பெண்ணா?''

''பெண்.''

''என்ன சொன்னாள்?''

விஜேஷ் தயங்க, ஃப்ளோரா சிரித்துக் கண் சிமிட் டினாள். ''என்னைப்பற்றி அந்தப் பெண் ஏதாவது மோசமான முறையில் விமர்சனம் செய்தாளா?''

''இல்லை.''

''பின்னே?''

''என்னை எச்சரிக்கை செய்தாள்.''

''எச்சரிக்கை செய்தாளா?''

''ம்... கடந்த ஆறு மாத காலத்தில் நீங்கள் சொல் லும் அந்த வீட்டை வாங்க அக்ரிமென்ட் போட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோய்விட்டார் களாம். 'இப்போது நீங்கள் மூன்றாவது நபராக அந்த வீட்டை வாங்க வந்திருக்கிறீர்கள். இந்த நிமிஷத் தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பாரீசுக்குப் போக அடுத்த ஃப்ளைட் டைப் பிடியுங்கள்' என்று சொன்னாள்.''

ஃப்ளோராவின் முகம் லேசாக மாறியது. ''நீங்கள் என்ன சொன்னீர்கள் விஜேஷ்?''

''நான் மேற்கொண்டு அவளிடம் பேசுவதற்கு முன்பாக இணைப்பைத் துண்டித்துவிட்டாள். பப்ளிக் பூத்தில் இருந்து பேசியிருக்கிறாள். அவள் ஒரு இந்தி யப் பெண். அதிலும் தமிழ்நாட்டுப் பெண். பெயர் காமாட்சி. ஊர் காஞ்சிபுரம்.

ஃப்ளோரா சில விநாடிகள் வரை மௌனம் காத்து விட்டு, விஜேஷைத் திரும்பிப் பார்த்தாள். ''இப்போது உங்கள் முடிவு என்ன விஜேஷ்? அந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா, இல்லை அவள் சொன்னது போல அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, பாரீஸ்போகப்போகிறீர்களா?''

''அந்த காமாட்சி சொன்னது உண்மையா, பொய்யா? நீங்கள் சொல்லும் அந்த வீட்டை இரண்டு பேர் வாங்க முயற்சி செய்து, அடுத்தடுத்து இறந்துபோனது உண்மையா?''

''உண்மைதான்!''

''எப்படி இறந்தார்கள்?''

''ஹார்ட் அட்டாக்! வீட்டை வாங்க வந்த அந்த இரண்டு பேருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் பெண். மற்றவர் ஆண். பெண்ணின் பெயர் பிரிட்டனி ஜான்சன். ஆணின் பெயர் ஜான் கரோல். முதலில் வீட்டை வாங்க முயற்சி செய்து அக்ரிமென்ட் போட்டவர் பிரிட்டனி ஜான்சன். அவருக்கு ஏற்கெனவே இருதய ஆபரேஷன் நடந்திருக்கிறது. டாக்டர் சொல்லியிருந்த நடைப்பயிற்சி தூரத்தைக் காட்டிலும் அதிக தூரம் நடந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு மரணம். அதற்குப் பிறகு இரண்டாவதாக அக்ரிமென்ட் போட்டவர் ஜான் கரோல். அவர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். குடிகாரர். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் அளவுக்கு மீறிக் குடிப்பவர். ஒரு சனிக் கிழமை இரவு மதுவின் தாக்கம் அதிகமாகி, மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். இரண்டுமே இயற்கையான முறையில் நேர்ந்த மரணங்கள். வீட்டை வாங்க நினைத்ததற்கும் அவர்கள் இறந்து போனதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இது ஒரு சாதாரண பிரச்னை. இதை யாரோ ஊதிவிட்டுப் பெரிதாக்க நினைக்கிறார்கள்.''

''இதனால் யாருக்கு என்ன லாபம்?''

''அதுதான் எனக்கும் புரியவில்லை. உங்களுக்கு போன் செய்து பயமுறுத்திய காமாட்சி யார் என்று தெரிந்தால்தான் இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். ஆனால், மறுபடியும் அந்தக் காமாட்சி உங்களுக்கு போன் செய்ய மாட்டாள். ஏனென்றால், அந்த வீட்டை வாங்க விடாதபடி பயமுறுத்துவது ஒன்றுதான் அவளுடைய நோக்கம். இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான். காமாட்சியின் எச்சரிக்கைக்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன?''

விஜேஷ் சிரித்தான். ''அவளுடைய எச்சரிக்கையை நான் குப்பைக் கூடைக்கு அனுப்பியாயிற்று. உங்களுடைய சகோதரன் ஃப்ரெட்ரிக் என் உயிர் நண்பன். எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன். நியூயார்க்கில் நல்ல வேலை கிடைத்து போகப்போகிறேன் என்று தெரிந்ததும், அங்கே ஒரு வீட்டை வாங் கும் யோசனையை அவன்தான் சொன் னான். அதற்கேற்றாற்போல் ஒரு பழங் கால வீடு உடனடியாக விற்பனைக்கு இருக்கிறது என்று நீங்கள் போனில் சொன்னதும், நான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு லாயர். அந்த வீட்டை விற்கக்கூடிய உரிமையான பவர் ஆஃப் அட்டர்னி உங்களிடம் இருப்பதால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.''

''நீங்கள் இப்படிப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது எந்தப் பிரச்னையும் இல்லாத வீடு. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, வீட்டை வாங்க முயற்சித்த இரண்டு பேர் இயற்கையான முறையில் இறந்து போயிருக் கிறார்கள். அதை ஒரு பெண் பொழுது போகாமல் கிளறிப் பார்த்து உங்களுக்கு கிலியை ஏற்படுத்த நினைத்து போன் செய்திருக்கிறாள்.''

''நான் அவளை மறந்துவிட்டேன் ஃப்ளோரா! எனக்கு அந்த வீட்டைக் காட்டுங்கள். முடிவாக ஒரு விலை பேசி அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம். எனக்கு பேங்கில் லோன் சாங்ஷன் ஆன துமே ரெஜிஸ்ட்ரேஷன்!''

''அப்படியென்றால் அந்தக் காமாட்சி யின் எச்சரிக்கையைப் பொருட்படுத்த வில்லையா?''

''ஒரு சதவிகிதம்கூட! உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில்தான் அந்த வீடு இருப்பதாகச் சொன்னீர்கள் ஃப்ளோரா. போகும்போதே ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விடலாமா?''

''வீட்டுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டு, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு போகலாமே?''

''இல்லை ஃப்ளோரா! எனக்கு விமானப் பய ணக் களைப்பு கொஞ்சம்கூட இல்லை. எதற்காக நியூயார்க் வந்தேனோ, அந்த வேலையை முதலில் பார்த்துவிடலாம்.''

''இன்னும் பத்தே நிமிடங்களில் அந்த வீடு இருக் கும் ஓல்ட் ப்ளாக் க்ரூவ்ஸ் ஏரியா வந்துவிடும்.''

''பிறகென்ன? பார்த்துவிட்டே போய்விடலாம்!''

கார் நெடுஞ்சாலையில் நான்காவது டிராக்கில் ஓர் இலவம்பஞ்சுத் துணுக்காகப் பறந்தது. நியூ யார்க்கின் பிரமாண்டமான கட்டடங்கள் இப்போது காணாமல் போயிருக்க, தொலைவில் மலைகள் நீல நிற பென்சிலால் கிழிக்கப்பட்ட கோணல்மாணல் கோடுகளாகத் தெரிந்தன.

விஜேஷ், ஃப்ளோராவிடம் ஏதோ பேச முயல, அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட் டது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான். புது நம்பர். செல்போனைக் காதுக்குக் கொடுத்து, ''யெஸ்'' என்றான்.

''நான் காஞ்சிபுரம் காமாட்சி. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க விஜேஷ்?''

''ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள்ளே பூந் துட்டுப் பேசறவங்களை நான் நம்பறது இல்லை. ஃப்ளோரா இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வீட்டைக் காட்டப்போறாங்க. நான் பார்க்கப் போறேன்.''

காமாட்சி சிரித்தாள்.

''என்ன சிரிக்கிறே?''

''வலிது... வலிது... விதி வலிது! இப்ப சிரிச்சது நானில்லை. உங்க முதுகுக்குப் பின்னாடி இருக்கிற விதி!''


Sunday, April 4, 2010

இனி, மின்மினி Episode 1

Thanks, Ananda Vikatan

நியூயார்க்

நியூயார்க் விமான நிலையத்தில் விமானம் இறங்கிக்கொண்டு இருந்தபோது காலை 7 மணி. சூரியன் பனிப் போர்வைக்குள் சிக்கி, பட்டர் தாளில் சுற்றப்பட்ட ஆப்பிள் போலத் தெரிய... கோலப் பொடியைத் தூவும் தினுசில் பனி மழை.

விஜேஷ் கெடுபிடியான கஸ்டம்ஸை முடித்துக்கொண்டு லவுஞ்சுக்குள் நுழைந்தபோது, அந்த அழகான பெண் பொன்னிற முடியும், கோபால்ட் நீல நிறக் கண்களுமாக விஜேஷை எதிர்கொண்டாள். கையில் அரை அடி உயரத்தில் ஒரு மினி பொக்கே.

''வெல்கம் விஜேஷ்!''

''யூ... யூ... ஃப்ளோரா?''

''யெஸ்!''

விஜேஷ் ஒரு புன்னகையை உதட்டில் நிறுத்தி ஆங்கிலத்தில் ஆச்சர்யப்பட்டான். ''என் நண்பன் ஃப்ரெட்ரிக்குக்கு இப்படி ஓர் அழகான தங்கை இருப்பாள் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.''

ஃப்ளோரா சிரித்தாள். வாய்க்குள் இருந்து ஒரு முத்துச்சரம் வெளிப்பட்டு, எனக்கு என்ன விலை கொடுக்கலாம் என்று கேட்டது.

''பயணம் எப்படி இருந்தது?''

''போர்! எந்த ஏர் ஹோஸ்டஸ்சும் பார்க்கும்படி இல்லை. உணவும் சரி இல்லை. பெயர் தெரியாத ஏதோ ஒரு திரவத்தில் ஊறிய வெள்ளரிக்காய்த் துண்டுகளும், வெண்ணெய் தடவாத காய்ந்த ரொட்டிகளையும் கொடுத்தால், அது எப்படி வயிற்றுக்குள் போகும்?''

ஃப்ளோரா மறுபடியும் முத்துச்சரத்தைக் காட்டினாள். 'ஓல்ட் வெஸ்ட்ப்யூரி'க்குப் போகும் வழியில் ஒரு நல்ல இண்டியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறது.''

''வேண்டாம்... வேண்டாம்! இப்போது பசி இல்லை. என் ஆர்வம் எல்லாம் இப்போது எதில் தெரியுமா? நான் வாங்கப்போகும் அந்த வீட்டைப்பற்றித்தான். இன்றைக்கே நான் வீட்டைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும் ஃப்ளோரா.''

''கவலைப்படாதீர்கள் மிஸ்டர் விஜேஷ். என் வீட்டுக்குப் போகும் வழியில் தான் அந்த வீடு இருக்கிறது. கொஞ்சம் அமைதியான சூழ்நிலையில் அமைந்த பழங்கால வீடுதான் என்றாலும், உறுதியான வீடு. விலையைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏனென்றால், நான் ஒரு லாயர் என்கிற முறையில் அந்த வீட்டை விற்பதற்கான முழு உரிமையும் என்னிடம்தான் உள்ளது.''

''அந்தத் தைரியத்தில்தான் பாரீஸில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்!''

இருவரும் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார்கள். ஃப்ளோரா தன்னுடைய பென்ஸ் காரை பார்க்கிங் வரிசையில் இருந்து உருவிக்கொண்டாள். விஜேஷ் தன் கையில் இருந்த சூட்கேஸை டிக்கியில் வைத்துவிட்டு, ஃப்ளோராவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். காரின் ஏ.சி. காற்றில் பெர்ஃப்யூம் மணத்தது.


காரை விரட்டினாள் ஃப்ளோரா. ரோட்டின் நான்கு டிராக்குகளில் அதிவேக டிராக்கைத் தேர்ந்தெடுத்தாள். 140 மைல் வேகத்தில் பென்ஸ் வீல்கள் சுழன்றன.

ஃப்ளோரா கேட்டாள்... ''நியூயார்க்குக்கு முதல்தடவை வருகிறீர்கள். உங்கள் பார்வையில் நியூயார்க் எப்படி?''

''மகா அழுக்கு! இப்படி ஓர் அழுக்கான நகரத்தை இந்தியாவில்கூடப் பார்க்க முடியாது. விமானத்தில் இருந்து கீழே இறங்கியவுடனே எனக்குப் பெரிய ஏமாற்றம். நம்முடைய ஷூவில் உள்ள தூசி பட்டு நியூயார்க் விமான நிலையத்தின் தரை அழுக்காகிவிடுமோ என்று விமானத்தில் இருந்தபோது நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், விமான நிலையத்தில் இறங்கியபோது, அங்கு இருந்த அழுக்கு பட்டு என் ஷூ விணாகிவிடக் கூடாதேன்னு கவலைப்பட்டேன். விமான நிலையம் மட்டும்தான் அழுக்கு என்று நினைத்தேன். அதைவிட, நகரம் ரொம்பவும் மோசம். பாருங்கள், ரோட்டோரங்களில் எவ்வளவு குப்பைகள்?''

''அதற்குக் காரணம், இங்குள்ள மக்கள்தொகை. அது தவிர, நீக்ரோக்களின்...'' என்று ஃப்ளோரா பேசிக்கொண்டு இருக்கும்போதே விஜேஷின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

''எக்ஸ்கியூஸ்மீ ஃப்ளோரா'' என்று சொல்லி, செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். ஒரு நம்பர்.

குரல் கொடுத்தான்.

''யெஸ்...''

''பேசறது விஜேஷா?''- ஒரு பெண் குரல் கேட்டது. நல்ல தமிழ்.

''ஆமா...''

''நீங்க பாரீஸில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கறீங்க இல்லையா?''

''நீங்க யாரு?''

''அது கடைசியில்! நான் இப்போ உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும். சொல்லலாமா... வேண்டாமா?''

''சொல்லு...''

''நியூயார்க்ல இப்போ உங்களுக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னோட்டமாக ஒரு வீட்டைப் பார்த்து விலை பேச வந்திருக்கீங்க. சரியா?''

''ரொம்ப சரி!''

''உங்ககூட பாரீஸில் வேலை செய்யற ஃப்ரெட்ரிக்கோட சிஸ்டர் ஃப்ளோரா ஒரு லாயர். அவளோட கஸ்டடியில் இருக்கிற ஒரு பழைய வீட்டை வாங்கலாம்னு உங்களுக்குள்ளே ஓர் எண்ணம். சரியா?''

''சரி!''

''இந்த நிமிஷத்தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுட்டு, பாரிசுக்குப் போக அடுத்த ஃப்ளைட்டைப் பிடிங்க.''

''ஏன், அந்த வீட்டுக்கு என்ன?''

''சொன்னா நம்பணும்...''

''சொல்லு...''

''கடந்த ஆறு மாச காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி, அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. இப்ப நீங்க மூணாவதா வந்திருக்கீங்க. நீங்க இந்தியா. அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்ங்கிற காரணத்துனாலதான் போன் பண்ணிப் பேசிட்டு இருக்கேன்.''

''சரி! மொதல்ல நீ யார்னு சொல்லு!''

''என் பேர் காமாட்சி.''

''ஊரு?''

''காஞ்சிபுரம்.''

கோவை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காலை 11 மணி. மக்கள் ஏகப்பட்ட பிரச்னைகளோடு வரிசைகளில் காத்துக்கொண்டு இருக்க... கலெக்டர் பங்கஜ் குமார் ஜீப்பில் இருந்து இறங்கி, வேக வேகமாக உள்ளே போனார். பி.ஏ. எதிர்ப்பட்டார். அவர் விஷ் செய்ததை அலட்சியமாக ஏற்றுக்கொண்டார்.

''ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே வாங்க'' என்றார்.

''யெஸ் ஸார்...''

பங்கஜ் குமார் தன் அறைக்குள் நுழைந்து நாற்காலிக்குத் தன் முதுகைக் கொடுத்துக்கொண்டே பி.ஏ-வை ஏறிட்டார். பேச்சில் அனல் பறந்தது. ''சண்முகம்! இது என்ன போலீஸ் ஸ்டேஷனா... இல்லை, கலெக்டர் ஆபீஸா? புருசன் பொஞ்சாதி சண்டை, என் பொண்டாட்டி எவன்கூடவோ ஓடிப் போயிட்டா... தேடிக் கண்டுபிடிச்சுக் குடுங்கன்னு ஒரு கூட்டம், அரிசியில் கல் இருக்கு; தண்ணியில் புழு இருக்குன்னு சொல்லிக்கிட்டு ரோடு மறியல். இந்த மாசத்துல மட்டும் 27 பேர் ஏதேதோ பிரச்னைகளுக்காக மண்ணெண்ணெய் டின்களோடு வந்து தீக்குளிக்கப் போறதா என் ஜீப் முன்னாடி உட்கார்ந்து பாடாய்ப்படுத்திட்டாங்க. இந்தப் பிரச்னைகளை ஏ.சி. உதவியோடு நீங்க பார்த்துக்கக் கூடாதா?''

''சார்... அதுல என்ன பிரச்னைன்னா?''

''நீங்க வழக்கமா சொல்ற எந்த எக்ஸ்பிளனேஷனும் எனக்கு வேண்டியது இல்லை. நான் மாவட்ட நிர்வாகப் பணிகளைக் கவனிப்பேனா? இல்லே... காணாமப் போன பொண்டாட்டிகளைத் தேடி அவனவன் புருஷன்களோடு சேர்த்துவெச்சிட்டு இருப்பேனா. நீங்களே சொல்லுங்க?''

''ஸாரி சார்... இனிமே இது மாதிரியான விஷயங்கள் உங்க மேஜை வரைக்கும் வராம நான் பார்த்துக்கிறேன் சார்!''

''இதையே 100 தடவை சொல்லிட்டீங்க...'' பங்கஜ் குமார் எரிச்சலோடு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருடைய செல்போன் அழைத்தது. எடுத்தார். 'விமிழிவிமிழிமி சிகிலிலிமிழிநி' என்று டிஸ்ப்ளே சொன்னது.

பி.ஏ-வைத் திரும்பிப் பார்த்தார்.

''நான் வர்றேன் சார்...'' பி.ஏ. அறையைக் கடந்து போனதும், பங்கஜ் குமார் மலர்ந்த முகமாய் செல்போனைக் காதுக்குப் பொருத்தி, மெதுவாகக் குரல் கொடுத்தார். ''சொல்லு மினி...''

''எனக்குக் காலையில் இருந்து மனசே சரியில்லைங்க.''

''ஏன், என்னாச்சு?''

''ஏதோ போன் வந்ததுன்னு சொல்லி, டிபன்கூடச் சாப்பிடாம அவசர அவசரமாக் கிளம்பிட்டீங்களே? எனக்கும் அதுக்கு அப்புறம் சாப்பிடத் தோணலை. எல்லாத்தையும் தூக்கி வேலைக்காரிக்குக் கொடுத்துட்டேன்.''

''என்னது! நீயும் சாப்பிடலையா? இதோ பார் மினி! நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு முந்தி உன்னைப் பெண் பார்க்க வரும்போது, ஒரு அஞ்சு நிமிஷம் தனியா சந்திச்சுப் பேசினோம். அப்ப நான் என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?''

''நல்லா ஞாபகம் இருக்கு.''

''என்ன சொன்னேன்?''

''நான் ஒரு கலெக்டரா இருக்கேன்கிற காரணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்காதே. மாசத்துல பாதி நாள் கேம்ப் போயிடுவேன். ஜனாதிபதி, பிரதமர்னு யார் வந்தாலும் வீட்டையும் உன்னையும் சுத்தமா மறந்துடுவேன். கலவரம் நடந்தா, அந்தப் பகுதிகளுக்குப் போகணும்... தீவிரவாதிகளோட மிரட்டல்களை எதிர்கொள்ளணும்... இப்படி வரிசையாக ஏதேதோ சொன்ன மாதிரி ஞாபகம். அதை மறுபடியும் ஒரு தடவை ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்துக்க.''

''சரி... சரி! மத்தியானம் லஞ்ச்சுக்காவது வருவீங்களா... மாட்டீங்களா?''

''இன்னிக்கு மக்களின் குறை தீர்க்கும் நாள். நிறைய மனுக்கள் வரும்... படிச்சுப் பார்த்து உடனடியா முடிவு எடுக்கணும். எவ்வளவு நேரமாகும்னு எனக்கே தெரியாது மினி!''

''நீங்க வரலைன்னா, நான் மத்தியானமும் சாப்பிட மாட்டேன். உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து இன்னிக்கு 51-வது நாள். இந்த ரெண்டு மாச காலத்துல நாம ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்ட நாட்களை விரல்விட்டு எண்ணிடலாம். நீங்க இன்னிக்கு என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ, எனக்குத் தெரியாது. சாப்பிட வரணும்.''

''இதோ பார் மினி... நான் வரலைன்னு பட்டினி கிடக்காதே. இன்னிக்குச் சாயந்தரம் புரந்தரதாஸ் ஹாலில் உன்னோட கச்சேரி இருக்கு. நீ சாப்பிடாமப் போனா ரெண்டு கீர்த்தனம் பாடறதுக்குள்ளே 'ஃபெய்ன்ட்' ஆயிடுவே!''

''அது உங்களுக்குப் புரிஞ்சா சரி! நான் இன்னிக்கு சபாவில் கச்சேரி பண்ணும்போது, ஒவ்வொரு கீர்த்தனைக்கும் அப்ளாஸ் வாங்கணும்னா... மத்தியானம் லஞ்ச்சுக்கு வரணும்... என்கூட உட்கார்ந்து சாப்பிடணும்!''

''நான் உன்னோட கழுத்துல தாலி கட்டினதே அந்தக் கீர்த்தனைகளோட இனிமைக்காகத்தான். அந்தக் கீர்த்தனைகளை நான் பட்டினி போட விரும்பலை. சரியாய் ஒரு மணிக்கு வந்துடறேன்.''

''தேங்க்யூடா!''

''என்ன சொன்னே?''

''ஸாரிடா...'' மறுமுனையில் மின்மினி ஒரு சிரிப்போடு செல்போனை அணைத்துவிட, பங்கஜ் குமாரும் தனக்குள் பீறிட்ட சிரிப்பை மென்றபடி செல்போனை அணைத்தார்.

கதவுக்கு வெளியே பியூன் அன்றைக்கு வந்த தபால் கட்டோடு நின்றிருப்பது தெரிந்தது. மேஜையின் மேல் இருந்த அழைப்பு மணியைத் தட்டியதும், பியூன் உள்ளே வந்தான். தபால்களை வைத்துக்கொண்டே தயக்கக் குரலில் கூப்பிட்டான்.

''ஐயா...''

''என்ன சாமித்துரை?''

''கடந்த ரெண்டு மூணு நாளா கையில் ஒரு கோரிக்கை மனுவோடு ஒருத்தர் வந்து உங்களைப் பார்க்கிறதுக்காக கால் கடுக்க நிக்கிறார். கோரிக்கை மனுவைப் பெட்டியில் போட்டுட்டுப் போங்கன்னு சொன்னாலும் அவர் கேட்கிறது இல்லை.''

''கோரிக்கை என்னன்னு கேட்டியா?''

''கையில் மனு எழுதிவெச்சிருக்கார் ஐயா.''

''அந்த ஆளை உள்ளே அனுப்பு.''

பியூன் தலையாட்டிவிட்டு வெளியேறிப் போனதும் அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் அந்தப் பெரியவர் உள்ளே வந்தார். முடி கொட்டிப் போன மண்டை. மோவாயில் கொத்தாக நரை தாடி.

''ஐயா! வணக்கம்...''

பங்கஜ் குமார் நிமிர்ந்தார்.

''உங்களுக்கு என்ன வேணும்?''

''ஐயா! என்னோட கோரிக்கையை ஒரு மனுவா எழுதிக் கொண்டுவந்து இருக்கேன். அதை நீங்க படிச்சு...''

''வேண்டாம்... உங்க கோரிக்கை என்னன்னு வாய்லயே சொல்லுங்க...''

''ஐயா... அது வந்து... என்னோட மருமக இப்ப என்னையும் என் பையனையும் விட்டுட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. சட்டப்படி விவாகரத்தும் ஆகலை. இந்த விஷயத்துல நீங்கதான் எங்களுக்கு உதவி பண்ணணும்!''

பங்கஜ் குமாருக்குள் கோபம் கொப்பளித்துக் கிளம்பியது. ஆத்திரத்தோடு நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழ முயன்றவர், பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பார்த்ததும் தளர்ந்தார்.

''ஐயா! இதுதான் என் மருமகளோட போட்டோ.''

போட்டோவில் மின்மினி!