Welcome to my blog :)

rss

Wednesday, April 14, 2010

இனி, மின்மினி Episode 3

நியூயார்க்

செல்போனில் தன் குரலின் டெசிபலை உயர்த்தினான் விஜேஷ்... ''இதோ பார்... ஒரு டெலிபோன் பூத்துக்குள்ளே புகுந்துக்கிட்டு நீ சொல்ற கதையைஎல்லாம் நம்ப நான் தயாரா இல்லை. விதி சிரிச்சா என்ன... அழுதா என்ன? நான் இப்போ அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். இன்னும் சில நிமிஷங்கள்ல அந்த வீட்டைப் பார்க்கப்போறேன். வீடு பிடிச்சிருந்தா, உடனே அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுடுவேன்!''

விஜேஷ் சொல்லச் சொல்ல, அந்தப் பெண் மறுமுனையில் கெஞ்சினாள்... ''ப்ளீஸ் விஜேஷ்! நான் சொல்றதைக் கேளுங்க. உங்களுக்கு நியூயார்க்கில் ஒரு வீடு வேணும், அவ்வளவுதானே? நான் ஏற்பாடு பண்றேன். ஹட்சன் நதிக்கரையில் எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டை விக்கிறதாச் சொல்லிட்டுஇருந்தார். நான் கேட்டுப் பார்க்கிறேன்.''

''என்னது! ஹட்சன் நதிக்கரையில் வீடு விலைக்கு வருதா?''

''ஆமா...''

''அந்த ஏரியாவில் வீடு வாங்கணும்னா, கையில குறைந்தபட்சம் பத்து லட்சம் டாலராவது இருக்கணுமே?''

''கண்டிப்பா...''


''அம்மா தாயே, ஆளை விடு! என் கையில் இருக்கிறது ரெண்டு லட்சம் டாலர்தான்! பத்துக்கு நான் எங்கே போவேன்?''

''நியூயார்க்கில் ரெண்டு லட்சம் டாலருக்கெல்லாம் வீடு கிடைக்கிறது ரொம்பவும் கஷ்டம். மூணு பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டை நீங்க வாங்கணும்னா, உங்க கையில் குறைஞ்சபட்சம் அஞ்சு லட்சம் டாலராவது வேணும், விஜேஷ்!''

''எனக்கு அதெல்லாம் தெரியாது. லாயர் ஃப்ளோரா ரெண்டு லட்சம் டாலருக்குள்ளே இப்பப் பார்க்கப்போற வீட்டை முடிச்சுத் தர்றதா சொல்லி இருக்காங்க. அது பழைய காலத்து வீடு. இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமா ரெனவேஷன் பண்ணிக்கலாம்.''

மறுமுனையில் அந்தப் பெண் பதற்றமானாள்... ''விஜேஷ்! அந்த வீட்டை வாங்காதீங்க. அது வீடு இல்லை.''

''பின்னே?''

''விபரீதம்!''

விஜேஷ் சிரித்தான். ''கடந்த ஆறு மாத காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோயிட்டாங்க; உங்களுக்கும் அந்த நிலைமை வரலாம்னு சொல்லப்போறே... அதுதானே விபரீதம்?''

''ம்...''

''இதோ பார்... நீ சொல்ற அந்த விபரீதத்தைப்பத்தி நான் ஃப்ளோராகிட்டே பேசிட்டேன்.''

''அதுக்கு என்ன சொன்னா?''

''அக்ரிமென்ட் போட்ட அந்த ரெண்டு பேருமே எழுபது வயசுக்கு மேற்பட்டவங்க. தவிர, அவங்க ஹார்ட் பேஷன்ட்ஸ். ஒரு பெண்; ஒரு ஆண். பெண் பிரிட்டனி ஜான்சன். அதிக நடைப் பயிற்சி காரணமா மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். ஆண் ஜான் கரோல். ஒவ்வொரு சனிக்கிழமை ராத்திரியும் ஓவராக் குடிப்பார். பைபாஸ் சர்ஜரி பண்ணின அந்த ஹார்ட் தாங்குமா? மண்டையைப் போட்டுட்டார். ஸோ, அந்த ரெண்டு பேரோட மரணங்களுக்கும் வீடு காரணம் இல்லை. தங்களுடைய ஹெல்த்தைப் பாதுகாக்கத் தவறியதுதான் காரணம். அக்ரிமென்ட் போடாம இருந்திருந்தாக்கூட, அந்த ரெண்டு பேரும் செத்துப்போயிருப்பாங்க...''

''விஜேஷ்! உங்களுக்கு ஒரு முக்கியமான உண்மை புரியலை!''

''என்ன உண்மை?''

''அந்த ரெண்டு பேரும் வயசானவங்க, ஹார்ட் பேஷன்ட்ஸ்னு சொன்னதெல்லாம் உண்மை. ஆனா, அந்த ரெண்டு பேரோட மரணம் இயற்கையானது அல்ல.''

''அப்புறம்?''

''மர்டர்ஸ்...''

''இப்படி ஏதாவது ஒண்ணைச் சொல்லி பயமுறுத்தி, என்னை அந்த வீட்டை வாங்கவிடாம பண்றதுதானே உன்னோட நோக்கம்.''

''இல்லை! உங்க உயிரைக் காப்பாத்தறதுதான் என் நோக்கம்.''

''அப்படின்னா, என் முன்னாடி வந்து நில்லு. அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டு. அவை நம்புற மாதிரி இருந்தா, போலீசுக்குப் போவோம்.''

''போலீசுக்குப் போக முடியாது விஜேஷ்.''

''ஏன்?''

''அதுல ஒரு பிரச்னை இருக்கு.''

''என்ன பிரச்னை?''

''அதை வெளியில் சொல்ல முடியாது.''

''என்ன நீ, நான் எதைக் கேட்டாலும் நெகட்டிவ்வாவே பதில் சொல்லிட்டு இருக்கே? அந்த ரெண்டு பேரும் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உன்னிடம் இருந்தா, போலீசுக்குப் போக வேண்டியது தானே?''

''இது நம்ம ஊர் போலீஸ் இல்லை. நியூயார்க் போலீஸ். சட்டம் இங்கே நாணல் மாதிரி வளைந்து கொடுக்காது. இரும்புத் தூண் மாதிரி நிக்கும்.''

''உனக்கு பயமா இருந்தா சொல்லு... நானும் உன்கூட வர்றேன்.''

''போலீசுக்கெல்லாம் போக முடியாது விஜேஷ். அப்படி போலீசுக்கு விஷயத்தைக் கொண்டு போனா அதனுடைய பின்விளைவுகள் ஒரு சுனாமி மாதிரி இருக்கும்.''

விஜேஷ் சிரித்தான். ''ஒரு பொய்யைப் பேசிட்டா, அந்தப் பொய்யைக் காப்பாத்த இன்னும் பத்து பொய்கள் சொல்ல வேண்டியிருக்குமாம். அதைத்தான் நீ இப்போ பண்ணிட்டு இருக்கே!''

''விஜேஷ்! நான் சொன்னதுல எதுவும் பொய் கிடையாது. தயவுபண்ணி அந்த வீட்டை வாங்கற எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க.''

''ஒரு கால்புள்ளியைக்கூட வெக்கற மாதிரி இல்லை. ஃப்ளோரா காரை நிறுத்தியாச்சு. வீடு இருக்கிற ஏரியா வுக்கு வந்துட்டோம்.''

''ஒருவேளை உங்களுக்கு அந்த வீடு பிடிக்க லைன்னா...''

''அதுக்கு சான்ஸே இல்லை. ஏன்னா, என்னுடைய நண்பன் ஃப்ரெட்ரிக்கும் அவனுடைய சிஸ்டர் ஃப்ளோராவும் ஒரு வீட்டை வாங்கிக்கச் சொல்லி சிபாரிசு பண்றாங்கன்னா, அதுல தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. ஸோ, இனிமே எனக்கு போன் பண்ணாதே! அந்த ஹட்சன் நதிக் கரையில் இருக்கிற வீட்டை வேற எந்த சோணகிரிக்காவது வாங்கிக் குடுத்து கமிஷன் பார்த்துடு!'' - பேசிவிட்டு செல்போனை அணைத்தான் விஜேஷ்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஃப்ளோரா, பெர்ஃப்யூம் வாசனையோடு பார்த்தாள். பேசிய தமிழ் புரியாததால் பார்வையில் குழப்பம்.

''செல்போனில் யார்?''

''சிறிது நேரத்துக்கு முன்பு பேசிய அதே பெண்.''

''அந்தப் பெண்ணிடம் கோபமாகப் பேசினீர்களே... ஏதாவது பிரச்னையா?''

''ஒரு பிரச்னையும் இல்லை. ஹட்சன் நதிக் கரையில் ஒரு வீடு விற்பனைக்கு வருகிறதாம். வாங்கிக்கொள்ளும்படி சொன்னாள். நான் வேண்டாம் என்று சொன்னதால், அவளுக்குக் கோபம். நாம் இப்போது பார்க்கப்போகிற வீட்டைப்பற்றி பொய் மழை பொழிந்து, அதை வாங்கவே கூடாது என்று சொல்லி, என்னை ஒருவழி செய்துவிட்டாள்.''

''பொறாமை பிடித்தவள்! ரியல் எஸ்டேட் பிசினஸில் இது போன்ற பொறாமைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.''

இருவரும் காரைவிட்டு இறங்கினார்கள். நகரை விட்டுத் தள்ளி இருந்த அந்த இடத்தில் நிசப்தம் ஏதோ செதுக்கப்பட்ட பொருள் மாதிரி தெரிந்தது. மனித நடமாட்டம் அறவே இல்லை. அடர்த்தியான சிப்ரஸ் மரங்களுக்கு நடுவில், அந்தச் செங்காவி வண்ணம் பூசப்பட்ட வீடு கண்ணாமூச்சி காட்டியது.

ஃப்ளோரா கையில் சாவியோடு முன்னால் நடந்தாள்.

விஜேஷ் கேட்டான்... ''கார் உள்ளே போகாதா?''

ஃப்ளோரா ஒரு சின்னப் புன்னகையோடு, வீட்டுக்கு முன்பாகத் தெரிந்த அந்தப் பெரிய இரும்பு காம்பவுண்ட் கேட்டைக் காட்டினாள். கேட் ஒரு பக்கமாகச் சாய்ந்து மண்ணில் புதைந்து போயிருந்தது.

''சென்ற வாரம் பெய்த பெரு மழையில் காம்பவுண்ட் கேட்டின் பில்லர் சாய்ந்து, கேட் மண்ணில் போய் மாட்டிக்கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் கேட்டைச் சரிசெய்யும் பணி துவங்கும். இப்போது நாம் இந்தப் பக்கவாட்டு கேட் வழியாக உள்ளே போய்விடலாம்.''

ஃப்ளோரா சொல்லிக்கொண்டே அந்தச் சிறிய கேட்டில் இருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்து கேட்டைத் தள்ளினாள். அது 'ழேய்ய்....' என்று ஒரு குடிகாரனைப் போல் கத்திக்கொண்டு பின்னால் போயிற்று. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். பனி பெய்து நனைந்து இருந்த புல் தரையில் ஃப்ளோரா முன்னால் நடந்து போக, விஜேஷ் அவளைப் பின்தொடர்ந்தான்.

பத்தடி நடந்தவன் சட்டென்று நின்றான். அவனுடைய முதுகில் யாரோ கைவைத்த மாதிரியான உணர்வு.

'நிஜமா... பிரமையா?' என்று யோசிப்பதற்குள், முதுகுக்குப் பின்னால் அந்த மூச்சிரைப்புச் சத்தம்!

கோவை

ந்த மத்தியான வேளையிலும், ஃப்ரிஜ்ஜில் வைத்த பொருள் போல் கோவை குளிர்ந்து போய் இருக்க, மின்மினி மொட்டை மாடியில் மெள்ள உலவியபடி செல்போனில் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள்.

''இல்ல மாலு... எனக்குக் கச்சேரி பண்றதுல இஷ்டமே இல்லை. என்னோட மிஸ்டர்தான் கம்பெல் பண்ணினார். ஏதோ இசை விழாவாம்... அதுக்குக் கிடைக்கிற ஃபண்ட்ஸ் எல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் போகுதாம். சரி, ஒரு நல்ல காரியத்துக்கு நாம கத்துக்கிட்ட பாட்டும் உதவட்டுமேன்னுதான் ஒப்புக்கிட்டேன். நீயும் உன் ஹஸ்பெண்டும் சரியா ஆறு மணிக்கெல்லாம் புரந்தரதாஸர் ஹாலுக்கு வந்துடுங்க. சீஃப் கெஸ்ட் வேறு யாருமில்லை, வானவராயர்தான்!'' - செல்போனில் பேசிக்கொண்டே திரும்பிய மின்மினி, வேலைக்காரி தயக்கமாக நிற்பதைப் பார்த்துவிட்டு, 'என்ன' என்பது போல் புருவங்களை உயர்த்தினாள்.

''அம்மா! கேட்ல இருக்கிற செக்யூரிட்டி பேசினாங்க. உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக பெரியவர் மல்லய்யா வந்து இருக்காராம். உள்ளே அனுப்பவான்னு கேட்டாங்க.''

மின்மினி சற்றே பதற்றமானாள். ''இதுக்கு என்கிட்டே கேட்கணுமா? அவர் எப்ப என்னைத் தேடி வந்தாலும், உடனடியாக உள்ளே அனுப்பிவைக்கணும்னு செக்யூரிட்டிகிட்டே ஏற்கெனவே சொல்லியிருந்தேனே!''

''இதோ அனுப்பச் சொல்றேம்மா!'' வேலைக்காரி படிகளில் இறங்கி ஓட, மின்மினி செல்போனுக்கு உதட்டைக் கொடுத்து, ''ஸாரி மாலு... எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த குருநாதர் கீழே வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காராம். சாயந்திரம் நாம பார்ப்போம்!''

''யாரு... அந்த பெல்லாரி மல்லய்யாவா?''

''பரவாயில்லையே! அவரோட பேரை அட்சரசுத்தமாக ஞாபகம் வெச்சிருக்கியே!''

எதிர்முனையில் அந்த மாலு சிரித்தாள்... ''தெலுங்கு சினிமா பட டைட்டில் மாதிரி இருக்கிற அவரோட பேரை அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா என்ன?''

''ஏய்! பெரியவங்களைக் கிண்டல் பண்ணாதே! பெல்லாரியில் நான் அப்பா-அம்மாவை இழந்துட்டு அநாதையா நின்னப்ப, அவர்தான் எனக்கு ஆதரவாக இருந்து மஹிளா சமிதி விடுதியில் இடம் வாங்கிக் கொடுத்து...''

''ஸாரி மின்மினி! இந்த பெல்லாரி ஃப்ளாஷ்பேக் ரீல் ரொம்பவும் பழசாயிடுச்சு. புதுசா வேற ஒரு பிரின்ட் போட்டுக்கோயேன்.''

''சாயந்திரம் வா சொல்றேன்... உன்னை...'' - மின்மினி பற்களைக் கடித்து, செல்போனை அணைத்தாள். படிகளில் வேகவேகமாக இறங்கி ஹாலுக்கு வந்தபோது, மல்லய்யா வாசற்படிகள் ஏறி உள்ளே வந்துகொண்டு இருந்தார்.

மல்லய்யாவுக்கு 60 வயது இருக்கலாம். சராசரி உயரத்தில், சற்றே கனத்த உடம்பு. ரோமம் இல்லாத முன் மண்டையை மூன்று விபூதிக் கோடுகளும், ஒரு குங்குமப் பொட்டும் குத்தகைக்கு எடுத்திருக்க... பின்னந்தலையில் இருந்த நீளமான முடிகள் ஒரு குடுமியாக மாறியிருந்தன. ஆந்திரா பாணியில் கட்டப்பட்ட வேட்டியும், மார்பைச் சுற்றியிருந்த வெள்ளை வஸ்திரமும் அவரை மதிப்போடு பார்க்கவைத்தது.

மின்மினி ஒட்டமும் நடையுமாகப் போய் அவருடைய பாதங்களில் விழுந்தாள். அவர் மின்மினியின் தலையில் தன் வலது கையைவைத்தார். ''நீ என்னிக்கும் நல்லாயிருக்கணும்... எழுந்திரும்மா!''

மின்மினி எழுந்தாள். கும்பிட்ட கையோடு சொன்னாள், ''ஐயா! மன்னிக்கணும்...''

''எதுக்கு?''

''கேட்ல இருந்த சென்ட்ரி கான்ஸ்டபிள் உங்களை உடனே உள்ளே அனுப்பாம வாசல்ல நிக்க வெச்சதுக்காக.''

மல்லய்யா தன் கறை இல்லாத பற்களைக் காட்டிச் சிரித்தார். ''அட, என்னம்மா நீ... இதுக்கெல்லாம் போய் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு? நீ யாரு... ஒரு கலெக்டரோட மனைவி. யார் வேணும்னாலும் சர்வசாதாரணமா வந்து போறதுக்கு இது என்ன சத்திரமா? நான் இந்த வீட்டுக்கு வேண்டியவன்னு தெரிஞ்சிருந்தும் பாம் டிடெக்டர் வெச்சு சோதனை போட்டுத்தான் அனுப்பினாங்க. யார் யாருக்கு என்னென்ன கடமைகள் இருக்கோ, அதை அவங்க பண்ணியாகணும்!'' - மல்லய்யா சொல்லிக்கொண்டே போய், ஹாலில் போட்டிருந்த சோபாவில் சாய்ந்தார். மின்மினியும் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

''ஐயா! திடீர்னு கோயம்புத்தூருக்கு வந்து இருக்கீங்க. ஏதாவது விசேஷமா?''

''விசேஷம்தாம்மா! இங்கே வடவள்ளிக்குப் பக்கத்துல க்யூரியோ கார்டன் அவென்யூன்னு ஒரு காலனி இருக்கு. அந்தக் காலனியில் அம்சமான விநாயகர் கோயில் ஒண்ணு இருக்கு. ஆபத்சகாய சுந்தர விநாயகர்னு பேர். சக்தி வாய்ந்த விநாயகர். அந்தக் கோயிலோட கும்பாபிஷேகம் நாளைக்கு. அதுல கலந்துக்கச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. உடனே புறப்பட்டு வந்துட்டேன்.''

''ரொம்பச் சந்தோஷம். ஐயா, இன்னிக்குச் சாயந்திரம் நீங்க ஃப்ரீயா?''

''ஏம்மா கேட்கிறே?''

''ஐயா! இன்னிக்குச் சாயந்திரம் ஆர்.எஸ்.புரம் புரந்தரதாஸர் ஹால்ல என்னோட கச்சேரி. நீங்க அவசியம் முன் வரிசையில் உட்கார்ந்து கேக்கணும்.''

''பஞ்சாமிர்தம் சாப்பிடக் கூலியா?'' - சொல்லிச் சிரித்தவர் கேட்டார்... ''உன்னோட கணவர் எப்படி இருக்கார்மா? கல்யாணத்துல பார்த்தது. அதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு ரெண்டு தடவை வந்தும் அவரைப் பார்க்கவே முடியலை.''

''இன்னிக்கு அவரை நீங்க பார்த்துடலாங்கய்யா! மத்தியானம் லஞ்சுக்குக் கண்டிப்பா வர்றதாகச் சொல்லியிருக்கார். நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம். அவரும் உங்களைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருப்பார். 'எனக்கு ஒரு வானம்பாடியைப் பரிசாகக் கொடுத்த வள்ளல் அவர்'னு புகழ்ந்துட்டே இருப்பார். நீங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா, அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார். இப்பவே போன் பண்ணிச் சொல்லிடறேன்.''

மின்மினி செல்போனை எடுத்தாள். தன் கணவரின் பெர்சனல் செல்போனுக்கு எண்களை அழுத்தினாள். மறுமுனையில் ரிங்டோன் போய், குரல் கேட்டது.

''யெஸ்!'' பங்கஜ்குமாரின் குரல்.

''என்ன யெஸ்! நான் உங்க மின்மினி.''

''ஸாரி... ராங் நம்பர்!'' - பங்கஜ்குமாரின் குரலைத் தொடர்ந்து, செல்போன் இணைப்பு அறுந்தது.

No comments: